சாத்தூர் அருகே பிரிட்ஜ் வெடித்து வீட்டில் தீ விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டு மலை கிராமத்தை சேர்ந்தவர் பரமானந்தம் (44) இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் தினேஷ் குமார் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பரமானந்தம் தன்னுடைய வீட்டின் அருகில் மரத்தடியில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி உள்ளனர். அப்போது பரமானந்தம் வீட்டில் இன்று மதியம் மின் கசிவு காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் பெரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.இந்த தீ விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி மேலும் தீ பரவாமல் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மின் சாதன பொருட்கள் உள்பட கட்டில் பீரோ பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தன. மேலும் தீ விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தின் போது வீட்டில் இருந்தவர்கள் வெளியே மரத்தடியில் அமர்ந்திருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.