தொடர் மழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்; நிவாரணம் வழங்க விவசாயிகள் வேண்டுகோள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் கரும்பு, நெல், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 100- ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்தனர். தொடர்ந்து பயிர்களுக்கு உரமிட்டும், கலை பரித்தும், கூத்தக்குடி ஏரி பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் கடந்த 10- நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் நெல் அறுவடை செய்யாமலே நெல்மணிகள் விவசாய நிலங்களில் முளைக்கத் தொடங்கின. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யமுடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி கருப்பகவுண்டர் கூறுகையில்,கூத்தக்குடியில் ஒரு சில விவசாயிகள் சொந்த நிலங்களிலும் பல விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் குத்தகைக்கு பயிற் செய்வது வழக்கம். அதன்படி நடவு செய்தது முதல் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து பயிரை பராமரித்து வந்தோம். இந்நிலையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடிவில்லை. மேலும் நெல் மணிகளும் முளைத்து விட்டது. இனி அறுவடை செய்தால் அறுவடை கூலிக்குகூட பணம் கிடைக்காது. மேலும் குத்தகைக்கு பயிர் செய்தவர்கள் நிலத்தின் உரிமையாளருக்கு குத்தகை வழங்கும் நிலை உள்ளது. எனவே தொடர் மழையால் நெல் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.vilupuramTimesXP TamilUpdated: 11 May 2023, 2:33 pm