குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் மேற்கொண்ட விவசாய சங்க தலைவர்:போலீசார் தடுத்து நிறுத்தினர்!
திருவண்ணாமலை அடுத்த தேவனந்தல் ஊராட்சிக்குட்பட்ட புனல்காடு கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் உள்ள காடுகளை அழித்து அந்த இடத்தில் புதிதாக குப்பை கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. திருவண்ணாமலை நகரத்தில் உள்ள 39 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் புனல்காடு கிராமம் அருகே புதிதாக அமைக்கப்படும் குப்பை கிடங்கில் கொட்டப்பட உள்ளது.இந்நிலையில் தங்களது கிராமத்தில் குப்பை கிடங்கு அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனுவை அளித்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்காத மாவட்ட நிர்வாகம் காவல்துறை உதவியுடன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மலையடிவாரத்தில் பள்ளம் தோண்டி குப்பைகளை கொட்டியது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் குப்பை கொட்டகூடாது என கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் நகராட்சி ஊழியர்களை கொண்டு மரக்கன்றுகளை அகற்றி குப்பை கிடங்கு அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 20 நாட்களுக்கும் மேலாக அதே பகுதியில் சமைத்து தங்கி விவசாய சங்கத்தினரும் கிராம மக்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று புனல்காடு கிராமத்தில் இருந்து விவசாய சங்கத்தினரும் கிராம மக்களும் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட சென்றனர். அப்பொழுது திருவண்ணாமலை வேலூர் சாலை அண்ணா நுழைவாயில் அருகே தடுப்புகள் அமைத்து கிராம மக்களை காவல்துறையினர் தடுத்தனர். இதனால் கிராம மக்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நடை பயணத்திற்கு ஆதரவாக இருந்த தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் சண்முகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தடுத்து நிறுத்தி தனியாக அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் தங்கள் கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் கைவிடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கத்தினரும் கிராம மக்களும் எச்சரிக்கை விடுத்தனர்.velloreTimesXP TamilUpdated: 29 May 2023, 3:32 pm - TimesXP Tamil
- tamilnadu
- vellore
- The Head Of The Farmer's Association Who Went On A Walk To Protest The Construction Of A Garbage Dump: The Police Stopped Him!