சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார விழா!!
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டாச்சியார்கள் வடக்காவிரியில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்.அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். பஞ்ச பூதங்கள், ஐம்பெரும் தொழில், ஐம்பெரும் கலை, ஐம்பெரும் பீடம், ஐம்பெரும் உயிர் அவத்தைகள் இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள இந்த பஞ்ச பிரகார உற்சவம். மாயாசூரனை சம்ஹரிக்க பராசக்தி மஹாமாரி வடிவம் எடுத்து இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக கடந்த 6 ந்தேதி தொடங்கி வருகின்ற 23ஆம் தேதி வரை பஞ்சப்பிரக விழா நடைபெறும். இதனையொட்டி கடந்த 6 ந்தேதி முதல் 14 ந்தேதி வரை ஒவ்வொரு இரவும் அம்மன் வெள்ளிக் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில் அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக இன்று பஞ்சப்பிரகார உற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டாச்சியார்கள் வடக்காவிரியில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு பரிவாரங்கள் புடை சூழ மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று கோயிலை சென்றடைந்தனர்.இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வேத பாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் செய்து பஞ்சப்பிரகார மகாபிஷேகம் நடைபெறுகிறது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 12 மணிக்கு வெள்ளி விமானத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 16ஆம் தேதி இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடாகிறார். 17 ஆம் தேதி இரவு 12 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளிகிறார்.18 தேதி தங்க கமல வாகனத்திலும், 19 ம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், 20-ஆம் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21ஆம் தேதி மரக்கற்பக விருட்ச வாகனத்திலும் 22ஆம் தேதி மர காமதேனு வாகனத்திலும் 23ம் தேதி மர அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.trichyTimesXP TamilUpdated: 15 May 2023, 3:25 pm