ஈச்சர் வேனில் வைத்திருந்த 19 லட்சம் பணம் கொள்ளை
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் தனக்கு சொந்தமான ஈச்சர் வாகனத்தில் அதே பகுதியை சேர்ந்த காய்கறி மண்டி உரிமையாளர் ராஜசேகர் என்பவரிடமிருந்து டன் கணக்கில் தேங்காய், காய்கறிகள், விதைப்பருப்புகள் ஆகியவற்றை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மொத்த காய்கறி விற்பனை கடைகளுக்கு தினந்தோறும் கொண்டு சென்று இறக்கி விட்டு அதற்க்குரிய தொகையை வசூலித்து கொண்டு முத்தூருக்கு திரும்பி வந்து மொத்த காய்கறி வியாபாரி ராஜசேகரிடம் பணத்தை ஒப்படைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகம் வழக்கம்போல தனது வாகனத்தில் ஓட்டுநர் முருகேஷ் உடன் ராஜசேகரிடமிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார்.அங்கு குறிப்பிட்ட காய்கறி மண்டிகளில் காய்கறிகளை இறக்கி விட்டு ரூபாய் 19லட்சத்து 50 ஆயிரத்தை வசூல் செய்து கொண்டு ஊருக்கு திரும்பி உள்ளனர். வழியில் பல்லடத்தை அடுத்த அவிநாசி பாளையம் சுங்கம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி கடையின் முன்பாக வாகனத்தை நிறுத்தி விட்டு சண்முகம் மற்றும் ஓட்டுநர் முருகேஷ் ஆகிய இருவரும் வசூலித்த தொகையை வண்டியின் உட்புறத்தில் வைத்து விட்டு டீ குடிப்பதற்கு கடைக்குள் சென்றுள்ளனர். சுமார் 20 நிமிடம் கழித்து வாகனத்திற்கு திரும்பிய இருவரும் உள்ளே பார்த்த போது வசூலித்து வைத்திருந்த தொகை 19 லட்சத்து 50 ஆயிரம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவிநாசி பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் பேக்கரியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வாகனத்தின் கதவை திறந்து உள்ளே வைத்திருந்த பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது. மேலும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையாளர்களை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.இன்னிலையில் பல்லடம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வடமாநில இளைஞர் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார் பேருந்துக்காக காத்திருந்த அவரிடம் விசாரணை மேற்கொண்ட போயு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரபு பிரகாஷ் என்பதும் தனது நண்பர்களுடன் சேர்ந்து பேக்கரியில் நின்றிருந்த ஈச்சர் வாகனத்தில் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து பிரபு பிரகாஷை போலீசார் கைது செய்து 5 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.trichyTimesXP TamilUpdated: 6 May 2023, 4:55 pm