தூத்துக்குடியில் 4ஆம் புத்தகத் திருவிழா பணிகள் : ஆட்சியர் ஆய்வு
1047 views
Subscribe தூத்துக்குடி videosதூத்துக்குடியில் 4ஆம் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பார்வையிட்டார்தூத்துக்குடியில் 4ஆம் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று பார்வையிட்டு தெரிவித்ததாவது: தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் 4வது புத்தகத்திருவிழா மற்றும் நெய்தல் கலைத்திருவிழா 21.04.2023 முதல் 01.05.2023 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. புத்தகத்திருவிழாவுடன் சேர்ந்து ஏப்ரல் 28, 29, 30, மற்றும் மே 1ம் தேதிகளில் நெய்தல் கலைத்திருவிழாவும் நடைபெறவுள்ளது. கலைத்திருவிழாவில் கலைகள் மட்டுமின்றி நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்துகொள்ளும் வகையில் 40 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. நமது மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய தொல்லியல் இடங்கள் அமைந்துள்ளன. எனவே நமது மாவட்டத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து மிகப் பெரிய அரங்கம் அமைக்கப்படவுள்ளது. அந்த அரங்கத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, வசவப்பபுரம், பறம்பூரில் கிடைத்த முதுமக்கள் தாழி மட்டுமல்லாமல் பண்டைய தமிழ் வரலாறு எப்படி வளர்ந்தது என்பது குறித்து மாடல் டெமொ அமைக்க இருக்கிறோம். குழந்தைகளுக்கு விடுமுறை வருவதால் அனைத்து பெற்றோரும் அவர்களை அழைத்து வர வேண்டும். புத்தகத் திருவிழாவில் சான்றோர்கள் உரையாற்ற உள்ளார்கள்.புத்தகத்திருவிழாவிற்கு வந்து செல்வதற்கு புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. புத்தகத் திருவிழாவையொட்டி எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபம், கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கம், திருச்செந்தூர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ஆகிய 3 இடங்களில் ஏப்ரல் 21, 22, 23 மற்றும் 28, 29, 30 ஆகிய (வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை) நாட்களில் புத்தகத் திருவிழாவில் உள்ள அரங்கங்கள் குறித்தும், புத்தகங்கள் குறித்தும், பேச்சாளர்கள் குறித்தும் பதாகைகள் வைக்கப்பட உள்ளது. மேலும், கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் கரிசல் இலக்கியங்கள் குறித்தும், எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் சுதந்திர போராட்டம் தொடர்பான படைப்புகள் குறித்தும், திருச்செந்தூர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில், சுதந்திரப்போராட்டத்தில் 4ஆவது தூணான ஊடகத்துறையின் பங்களிப்பு தொடர்பாகவும் கருத்தரங்கங்கள் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவிற்கு ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் வருகை தந்து புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், அதிகளவில் புத்தகங்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வில், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரின் நேர்முக உதவியாளர் பீவி ஜான், அலுவலக மேலாளர் பொற்செல்வம், செயற்பொறியாளர் அமலா, மோகன்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.