குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம்!
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் அமைந்துள்ளன . அதில் எட்டாவது வார்டில் துர்க்காலய சாலை , அண்ணா நகர், மெய்ப்பொருள் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன இந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். நாள்தோறும் காலையில் அவர்கள் நகராட்சி மூலம் கொடுக்கக்கூடிய தண்ணீரை தான் குடிக்கவும் மற்ற பயன்பாடுகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் இன்று காலையில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் பொழுது குடிநீருடன் கழிவு நீர் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்கள். இதனால் சிலர் தண்ணீர் பிடிக்காமல் திரும்ப சென்றார்கள். இவர்கள் அன்றாடம் காலையில் வீட்டு வேலைகளை முடித்து வைத்துவிட்டு வேலைக்கு செல்லக்கூடிய நபர்கள். இந்த நிலையில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் அதை பயன்படுத்த முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டார்கள். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிதண்ணீரில் கழிவு நீர் கலந்து இருப்பது தெரியாமல் அதனை குடிப்பதனால் அவர்களுக்கு காய்ச்சல் வாந்தி மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அதுபோல திருவாரூர் நகராட்சியில் ஐந்தாவது வார்டு பகுதியில் கேக்கரை என்ற பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் வடக்கு தெரு, மேல தெரு, தெற்கு தெரு, மாரியம்மன் கோவில் தெரு முதலான பகுதிகள் உள்ளன. அங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அங்கும் தொடர்ந்து பல மாதங்களாக போதுமான அளவிற்கு குடிநீர் வராமல் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக அப்பகுதி மக்களும் புகார் தெரிவித்துள்ளார்கள். ஆகவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐந்தாவது வார்டு மற்றும் எட்டாவது வார்டு மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.tamilnaduTimesXP TamilUpdated: 18 May 2023, 12:01 pm