உலக கடல்பசு தினம் : ராமேஸ்வரத்தில் இருந்து மனோரா வரை இருசக்கர வாகன பேரணி!
வருகிற 28ஆம் தேதி உலக கடல் பசு தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 22ஆம் தேதி ராமேஸ்வரத்தில், "கடற்பசுவை பாதுகாப்போம் கடலை பாதுகாப்போம்" என்ற முழக்கத்துடன் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. அதைத் தொடர்ந்து ராமநாதபுரம், முத்துக்குடா, மணமேல்குடி, கட்டுமாவடி வழியாக இன்று காலை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மனோராவில் 70 பேர் கொண்ட பயணக் குழுவினர் வந்தடைந்தனர். மனோராவை தலையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு கடல் பசு பாதுகாப்பு மையத்தை ரூ.15 கோடியில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி கலந்துகொண்டு பயணக் குழுவினரை வரவேற்று அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில், வைல்ட் லைப் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா, மீன்வளத்துறை அதிகாரிகள், கடற்பசுவை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் ஓம்கார் பவுண்டேஷன், கடலோர காவல் படையினர், சமூக ஆர்வலர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.thanjavurTimesXP TamilUpdated: 24 May 2023, 3:35 pm