சிக்கிக் கொண்ட பேருந்து; திணறிய பயணிகள்!மதுரை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதையில் வழக்கம் போல் மழை நீர் முழுவதுமாக தேங்கியிருந்தது. இந்த நிலையில் இன்று காலை மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து 80 பயணிகளுடன் திருப்பரங்குன்றம் அருகே தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு செல்வதற்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை வழியாக சென்ற போது சுரங்கப்பாதையில் இருந்த மழைநீரில் பயணிகளுடன் அரசு பேருந்து சிக்கிக்கொண்டது. இதனால் பேருந்து சுரங்க பாதையை விட்டு வெளியே செல்ல முடியாது சூழல் உருவானதால் அரசு பேருந்தில் கல்லூரிக்கு செல்வதற்கு பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தண்ணீரில் இறங்கி கல்லூரிக்கு ஆபத்தான முறையில் நடந்தே செல்லும் சூழல் உருவாகியது.இத்தகவல் அறிந்து வந்த மதுரை மாநகர போக்குவரத்து துறை பணியாளர்கள் அரசு பேருந்தை கனரக வாகனம் கொண்டு மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். சுரங்கப்பாதையில் இருந்த மழை நீர் செல்வதற்கான வழிகள் ஏதும் இல்லாததால் தண்ணீர் தேங்கிநிற்கும் சூழல் உருவாகிறது.மழைக்காலங்களில் இது போன்ற நடைபெறும் பிரச்சனைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அப்போது மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.