கரூரில் 8-வது நாளாக தொடரும் சோதனை!
கரூரில் 8-வது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட லாரிமேடு பகுதியில் அமைந்துள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் நேற்று தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்று வருகிறது. சோதனையிடையே துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன், இரண்டு அட்டை பெட்டிகளை காரில் வைத்து எடுத்துச் சென்றனர். அட்டை பெட்டியில் இருந்த ஆவணங்கள் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.இதேபோல், கரூர் - கோவை நெடுஞ்சாலை ரெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றிவிட்டு, மீண்டும் சோதனையை தொடங்கினர். இன்று அதிகாலை 4.00 மணி வரை நடைபெற்ற சோதனைக்கு பிறகு மீண்டும் பூட்டி சீல் வைத்து விட்டு சாவியை எடுத்துச் சென்றனர்.மேலும், அந்த இடத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதில் உணவகத்தின் பங்குதாரர் ஜீவா என்பவருக்கு அளித்த உத்தரவில், கொங்கு மெஸ் கணக்கு புத்தகங்கள், பிற ஆவணங்கள், பணம், பொன், நகைகள் அல்லது பிற மதிப்பு மிக்க பொருட்களை அத்துமீறி எடுத்துச் செல்லக்கூடாது எனவும், உத்தரவை மீறும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வருமானவரித்துறை துணை இயக்குனர் மலர்க்கொடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.karurTimesXP TamilUpdated: 2 Jun 2023, 1:19 pm