ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளில் செயல் அலுவலர் முறைகேட்டில் ஈடுபட்டதால் பரபரப்பு!
1060 views
Subscribe கன்னியாகுமரி videosகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே கணபதிபுரம் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளமோடி பகுதியில் மிஷன் வீடு என்ற பெயரில் புதிதாக கட்டடம் கட்டுவதற்கான வரைபட அனுமதி கேட்டு நீண்ட காலமாக சிலர் முயற்சித்து வந்தனர். ஆனால், பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்து வந்த நிலையில், இன்று திடீரென அனுமதி அளிக்கப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெள்ளமோடி பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மாலையில் கணபதிபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நீண்ட காலமாக அனுமதி மறுக்கப்பட்டு இருந்த கட்டிட வரைபடத்திற்கு திடீரென அனுமதி அளித்ததன் காரணம் என்ன என கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை ஒட்டி, பேரூராட்சி தலைவரும் கவுன்சிலர்களும் பொதுமக்களை சமாதானம் செய்ய முற்பட்டனர். ஆனால், அனுமதி அளித்ததற்கான காரணம் குறித்து அறியாமல் அங்கிருந்து நகர மாட்டோம் என பொதுமக்கள் விடாப்பிடியாக அலுவலகத்தை முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தனர். அதை தொடர்ந்து கணபதிபுரம் பேரூராட்சியின் அவசர கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக பிரச்சினைக்குரிய கட்டிட வரைபட அனுமதியை ரத்து செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிகாரியால் அனுமதி வழங்கப்பட்டதை ஒட்டி பிரச்சனைக்குரிய கட்டிடத்தின் உரிமையாளர் வங்கியில் செலுத்திய 95 ஆயிரத்து 266 ரூபாய்க்கான காசோலையை விண்ணப்பதாரரிடம்திரும்ப வழங்குவது எனவும் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களிடம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கு வந்த நாகர்கோயில் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி இரு தரப்பினரையும் அழைத்து பேசி பிரச்சனைக்குரிய கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என என உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர். ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளில் அதிகாரி முறைகேடாக கட்டிடம் கட்டுவதற்கான வரைபட அனுமதி அளித்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.