செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்:பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவருக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனை முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் 50-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தினுள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர்மருத்துவர் அனிதா ஆகியோர் பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் தரப்பில் பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம்.நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.