ஶ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் 1006 ஆம் ஆண்டு திரு அவதார உற்சவம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யாகாரஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் ஸ்ரீ ராமானுஜர் திரு அவதார பிரம்மோற்சவம் 10 நாட்களுக்கு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 1006 ஆம் ஆண்டிற்கான பிரம்ம உற்சவ விழா கடந்த 13 தேதி தொடங்கியது.இதையொட்டி ஸ்ரீ ராமானுஜருக்கு 8 நாட்களாக சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிம்ம வாகனம், தங்க பல்லுக்கு, புஷ்ப பல்லுக்கு, யாளி வாகனம் உள்ளிட்டவற்றில் எழுந்தருளி காலை மாலை என இரு வேலையும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் இந்தநிலையில் விழாவின் 9 ஆம் நாளான இன்று உற்சவமூர்த்தி ஸ்ரீ ராமானுஜர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.முன்னதாக உற்சவமூர்த்திக்கு பால், தயிர், குங்குமப்பூ, சந்தனம், இளநீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.திருத்தேர் விழாவில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசய்துடன் முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று வழிபட்டனர்.மேலும் திருத்தேர் விழாவை ஒட்டி ஆங்காங்கே தண்ணீர், மோர்,அன்னதானங்களும் வந்திருந்த பக்தர்களுக்கும்,பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.