நாகையில்,சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்த 77 வயதான சிங்கப் பெண்!
1051 views
Subscribe தமிழ்நாடு videosநாகப்பட்டினம், புதிய முகமதுயார் தெருவில் வசித்து வருபவர் 77 வயதான ராமாமிர்தம். தனது சிறு வயதிலேயே தந்தை மூலமாக நீச்சல் கற்றுக் கொண்ட இவர் தனது முதுமை காலத்திலும், நீச்சல் அடித்து பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளார். தனது பேரக்குழந்தைகளுக்கும் தான் கற்ற நீச்சலை இவர் கற்றுக் கொடுத்து, உடல் ஆரோக்கியத்திற்கும் நீர்நிலையில் குளிக்கும் போது ஏற்படும் உயிரிழப்பை தவிர்ப்பதற்கும் நீச்சல் கட்டாயம் அவசியம் என்பதை வலியுறுத்தி வருகிறார் 77 வயதான சிங்கப்பெண். இது தொடர்பான செய்தி தொலைக்காட்சியில் வெளியான நிலையில், சாதிக்க வயது ஒரு தடை இல்லையென நிரூபணம் செய்துள்ள பாட்டியை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் சென்று பாராட்டினார். பாட்டியின் இல்லத்திற்கு சென்ற அவர், நீச்சல் கற்றுக் கொண்ட விதம் மற்றும் நோக்கம் குறித்து பாட்டியிடம் கேட்டறிந்தார். பலருக்கும் முன் உதாரணமாக இந்த வயதிலும் நீச்சல் அடித்து வருவதை பார்த்தால் வியப்பாக இருக்கிறது மேலும் உடல் ஆரோக்கியத்தோடு நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்தனை செய்வதாக கூறி பரிசு பொருள் ஒன்றை வழங்கினார் . இதனைக் கண்டு நெகிழ்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தங்களது நன்றியை தெரிவித்ததோடு, எஸ்பி- யோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தன்னம்பிக்கையுடன் துணிச்சலுடன் 77 வயதான பாட்டி நீச்சல் அடித்து அசத்தி வருவதை பாராட்டும் விதமாக நாக எஸ் பி நேரடியாக அவரது வீட்டிற்கு சென்ற நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.