கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு குப்பை ஏற்றி வந்த லாரிகள் நிறுத்தப்பட்டன!
தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சென்று வரும் சூழலில், இந்த வழியாக அவ்வப்போது கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், எலக்ட்ரானிக் உதிரிப்பாக கழிவுகள், குப்பை கழிவுகள் உள்ளிட்டவைகளை கேரளாவிலிருந்து எடுத்து வந்து தமிழகத்தில் ஆங்காங்கே கொட்டுவதால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய சுகாதார பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் கழிவு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை உள்ளே அனுமதிக்க கூடாது என தமிழக அரசு தடைவிதித்துள்ள நிலையில், புளியரை பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்தனர்.அப்பொழுது, கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த ஒரு லாரியை மறித்து சோதனை செய்தபோது, அந்த லாரியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசி உள்ளது.உடனே லாரியை சோதனை செய்த போது அந்த லாரியில் குப்பை கழிவுகள் ஏராளமாக இருந்தது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 7 லாரிகள் அதே கழிவுகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்குள் நுழையவே, அந்த லாரிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.அப்போது, கொல்லம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து அள்ளப்பட்ட குப்பைகள் லாரியில் உள்ளது எனவும், இதனை சிமெண்ட் தயாரிப்பதற்காக தாங்கள் எடுத்துச் செல்வதாகவும் கூறினர்.அதனை ஏற்க மறுத்த தமிழக காவல்துறையினர் தமிழக எல்லைக்குள் லாரிகளை அனுமதிக்காமல், அந்த ஏழு லாரிகளையும் கேரளாவை நோக்கி திருப்பி அனுப்பினர்.மேலும், தமிழக எல்லைக்குள் அவ்வப்போது கேரள மாநிலத்திலிருந்து கழிவுகளை கொண்டுவந்து கொட்டி வருவதால் மிகப் பெரிய சுகாதார சீர் கேடு நிலவி வருவதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறையினர் எச்சரிக்கை விட்டுள்ளனர்.tamilnaduTimesXP TamilUpdated: 11 May 2023, 4:08 pm