சிறுதானிய உணவு கண்காட்சியில் பங்கேற்ற RN ரவிஉணவு உற்பத்தியில் உபரி நாடாக இந்தியா உள்ளது-ஆளுநர் ஆர்.என்.ரவி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கம் மற்றும் எதிர்காலம் சார்ந்த ‘‘சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி 2023’’ இன்று நடந்தது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வையிட்டார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி முன்னிலை வகித்தார். ஆளுநர் முன்னிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், 10 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. முன்னதாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சார்பில் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை பார்வையிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவைத்து மகிழ்ந்தார்.இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்த மாநாட்டில் விவசாயிகள், தொழில் முனைவோர், வருங்கால வேளாண் விஞ்ஞானிகள் என அனைவரும் ஒரே மேடையில் உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு நாடு முழுவதும் உள்ள நிபுணர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு செல்லும் முன் பொருளாதாரத்தை அழித்தார்கள். நமக்கு ஆதாரமாக விவசாயம் மட்டுமே இருந்தது. இந்த நிலம் விவசாய உற்பத்தியை நம்பி இருந்தது. 1800ம் ஆண்டு ஒரு ஹெக்டருக்கு 7 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்தோம். இப்போது டெல்டா பெல்ட்டில் 6 மெட்ரிக் டன் நெல் உருவாக்குகிறோம். உலகில் அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான். ஆனால், ஜப்பானால் கூட அந்த அளவு உற்பத்தி செய்ய முடியவில்லை. 200 ஆண்டு காலனியாதிக்கத்தில் நமது விவசாயத்தை அழித்தார்கள். வேளாண் விஞ்ஞானிகளுக்கு நன்றி. விவசாய புரட்சியின் மூலம் இப்போது தரமான உணவுகள் கிடைக்கின்றன. சீன போரின்போது நாம், உணவு பற்றாக்குறையுடன் இருந்தோம். தற்போது உணவு உபரி நாடாக உள்ளோம்.நிலையான ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு சிறுதானியங்கள் தேவை. 2030ம் ஆண்டு கார்பன் இல்லாத ஆற்றல் தேவை. 2030ம் ஆண்டுக்குள் 140 கோடி மக்களை கொண்டு இதனை சாதிப்போம். அதற்கான நகர்வை பிரதமர் துவங்கி உள்ளார். இவ்வாறு ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.