கோவையில் பிரபல தனியார் ஹோட்டல் உணவில் கரப்பான் பூச்சி - வாடிக்கையாளர் அதிர்ச்சி.கோவை சாய்பாபா காலனி என்.எல்.ஆர் சாலையில் பிரபல தனியார்(அன்னபூர்ணா) உணவகம் அமைந்து உள்ளது. நேற்று இந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் குடும்பத்துடன் உணவருந்த வந்துள்ளார். அப்போது அந்த வாடிக்கையாளர் வாங்கிய மசால் தோசையில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் கேட்ட போது உரிய பதில் அளிக்க மறுத்த ஊழியர்கள் செய்வது அறியாது திகைத்து நின்றனர். மேலும் அவர் வாங்கிய மசாலா தோசையில் உள்ள கரப்பான் பூச்சி மற்றும் அவர் ஊழியர்களிடம் இது குறித்து கேட்கும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையோரம் இருக்கும் உணவகங்கள் மற்றும் பழக் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, தரமற்ற உணவுகளை வழங்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு அபராதமும் விதித்து வரும் நிலையில் பிரபலமான தனியார் உணவகங்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதே சமயம் அரசு நிகழ்ச்சிகள் ஏதேனும் நடைபெற்றாலும் இது போன்ற பிரபல தனியார் ஹோட்டல்களில் இருந்து தான் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் உணவுகள் வாங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.