பழனி கோயிலில் சித்திரைத் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது!
1043 views
Subscribe தமிழ்நாடு videosபழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் கடந்த புதன்கிழமை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாள் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெற்றது. அருள்மிகு பெருமாள் தம்பதி சமேதராக அனுமார் வாகனம், சப்பரம், தங்கக்குதிரை வாகனம், சேஷவாகனம், சிம்மவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா எழுந்தருளினார். கோயில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள், பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அருள்மிகு இலக்குமி சமேதர் நாராயணப் பெருமாளுக்கு வண்ண பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு நகைகள் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டர்கள் சிறப்பு யாகம் நடத்தி பூஜைகள் செய்ய, மேளதாளம் முழங்க மங்கலநாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு தேங்காய் உருட்டுதல், பூப்பந்து வீசுதல் போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பட்டர்கள் நடனமாடியபடியே மாலைகள் மாற்றினர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு புஷ்பகைங்கர்ய சபா சார்பில் சிறப்பு மலரலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பூஜைகளை திருவள்ளரை கோயில் கோபாலகிருஷ்ண பட்டர் தலைமையில் கார்த்திக் அய்யங்கார், பாலாஜி அய்யங்கார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். நாளை(வியாழக்கிழமை) அதிகாலை சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது.