பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயம்!
1023 views
Subscribe தமிழ்நாடு videosதிருப்பத்தூர் மே 11, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அருள்மிகு பூமாயி அம்மனின் கோயில் 89 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் 4 பிரிவுகளாக வெகு விமர்சையாக நடைபெற்றது. 36 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் நேற்று மாலை நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு மாடுகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. நடுமாடு பிரிவில் 12 மாட்டுவண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 19 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. நடு மாடுகளுக்கு சிவகங்கை சாலை தண்ணீர் தொட்டி (வாட்டர் டேங்) அருகில் இருந்து தானிப்பட்டி வரையில் 7 மைல் தூரமும் பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளுக்கு க.பிள்ளையார்பட்டி விலக்கு வரை 5 மைல் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு பந்தயங்கள் ஆரம்பிக்கப்பட்டது. பந்தய கமிட்டி நிர்வாகிகள் கொடி அசைத்தவுடன் மின்னல் வேகத்தில் சீறி சென்ற காளைகள் போட்டி போட்டுக் கொண்டு முந்தி சென்றனர். அப்போது மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த சாரதி அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார். வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும் நின்று விசில் அடித்து ஆரவாரம் செய்து மாட்டுவண்டி பந்தயத்தை ரசித்தனர். நடுமாடு வண்டி பந்தயத்தில் இளங்கிப்பட்டி அர்ச்சுனன் முதலாவது பரிசும், தானிப்பட்டி ராமாயி இரண்டாவது பரிசும், சிவகங்கை புதுப்பட்டி இளையராஜா மூன்றாவது பரிசும், குண்டேந்தல்பட்டி கனகவல்லி நான்காவது பரிசும் பெற்றனர். இதே போன்று பூஞ்சிட்டு மாடு பிரிவில் குண்டேந்தல்பட்டி சகாதேவன் முதல் பரிசும், குண்டேந்தல்பட்டி கனகவள்ளி இரண்டாவது பரிசும், பூண்டி கேசவன் மூன்றாவது பரிசும், எஸ்.எஸ்.கோட்டை சுப்பு நான்காவது பரிசும் பெற்றனர். இன்று காலை பெரிய மாடு மற்றும் சிறிய மாடுகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில் பெரிய மாடு பிரிவில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் புலிமலைப்பட்டி முனிச்சாமி முதல் பரிசும், மாங்குளம் தேவேந்திரன் 2-வது பரிசும், சூரக்குண்டு இளவரசு 3-வது பரிசும், அவனியாபுரம் முருகன் 4-வது பரிசம் பெற்றனர். சிறிய மாடு பிரிவில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் அவனியாபுரம் மோகன்சாமி முதல் பரிசும், புதுப்பட்டி மணி 2-வது பரிசும், புதுப்பட்டி இளையராஜா 3-வது பரிசும், ஆட்டுகுளம் நகுல்நிலா 4 வது பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், மாட்டு வண்டிகளை ஒட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க தொகை பரிசாகவும், கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பந்தய கமிட்டி விழா குழுவினர் செய்திருந்தனர்.