காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 5,000 வாழைமரங்கள் சாய்ந்து சேதம்-விவசாயிகள் கவலை!
Subscribe தமிழ்நாடு videos
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சின்னுபட்டி, ரெட்டியபட்டி, கரட்டுப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் நேற்று பலத்தகாற்றோடு இடி மின்னலுடன் ஒரு மணி நேரமாக மழை பெய்தது. அதில் சின்னுபட்டியைச் சேர்ந்த விவசாயி மரியலூயிஸ் என்பவர் தோட்டத்தில் வாழை மரங்கள் 1500, பிருதிவிராஜ் என்பவர் தோட்டத்தில் வாழைமரங்கள் 1500, ஆரோக்கியசாமி என்பவர் தோட்டத்தில் வாழை மரங்கள் 1000 மற்றும் ரெட்டியபட்டியை சேர்ந்த தங்கராஜ் வாழை மரங்கள் 1000 உள்பட சுமார் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் வாழைத்தாருடன் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். உடனடியாக அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விவசாயி மரியலூயிஸ் கூறுகையில் நான் நகை அடமானம் வைத்தும், வங்கியில் கடன் வாங்கி வாழை விவசாயம் செய்து இருந்தோம். தார்போட்டு சில வாரங்களில் அறுவடை செய்யும் நிலையில் திடீர் மழை காற்றால் பலத்த நஷ்டம் அடைந்துள்ளோம்.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் என்ன செய்வது என்று புரியாமல் நிலை குலைந்து உள்ளோம். அரசு உடனடி நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.