மலைச்சாலையில் சென்ற வேன் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகிணற்றில் விழுவதில் இருந்து தப்பிய பதைபதைக்கும் காட்சிகள் வெளியீடு.கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள லட்சுமி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் அருண்.இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் KTCநகர், சண்முகபுரத்தைச் சேர்ந்த ஜான்சி என்பவருக்கும்,இன்று மூணாறு லட்சுமி எஸ்டேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த திருமண நிகழ்விற்காக,நேற்று பிற்பகலில் மணப்பெண் மற்றும் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இரண்டு வேன்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மூணாறு நோக்கி சென்றனர்.வாகனம் நேற்று இரவு 7 மணியளவில் தமிழக கேரள எல்லையான போடிமெட்டு பகுதியில் இருந்து கேரள பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த போது தோண்டிமலை மற்றும் பூப்பாறை ஆகிய இடத்திற்கு அருகே மணப்பெண் சென்ற வேனுக்கு பின்னால் அவரது உறவினர்கள் சென்ற வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த 50 அடி ஆழ பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.வேனிற்குள் இருந்தவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி வழியாக சென்றோர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.இதில் வேனில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.மேலும் 18 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்களின் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் வரும் வழியில் மேலும் ஒருவர் உயிர் வந்தார். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த கோர விபத்தில் பெருமாள்(60),வள்ளி (65) சசீந்திரன் (8) சுதா (20) ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் கணேசன் (29)தெய்வாணை(55), ஹரிகிருஷ்ணன் (13), மகேஷ்கண்ணன்(40), சுவாதி (16), சீதாலட்சுமி (32)அற்புதசெண்பகம்(40), ஸ்ரீபிரகாஷ் (15), இந்திராணி (52) தனிஷ்கா (5) வசந்தி (31) செல்வபிரகாஷ்(15) கிருஷ்ணம்மாள்(65),சுசிலேந்திரன்(4),சுடர்ஒளி (37) கண்ணன் (32) மற்றம் பெயர் தெரியாத 55 வயது பெண் ஆகிய 17 பேர் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் இந்த விபத்து அப்பகுதியில் தனியார் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த சி சி டிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது.வேன் 50 அடி பள்ளத்தில் மின்னல் வேகத்தில் விழும் காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளன. மேலும் வேன் விழுந்த இடத்திற்கு மிக அருகில் ராட்சத கிணறு உள்ளது. வேன் அந்தக் கிணற்றில் விழுந்திருந்தால் அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.